தீவிரவாத முறியடிப்பு தொடர்பாக சிறிலங்கா படையினர் பாகிஸ்தானில் கூட்டுப் பயிற்சி
சிறிலங்கா, பாகிஸ்தான், மாலைதீவு இராணுவத்தினர் இணைந்து, பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில், தீவிரவாத முறியடிப்புத் தொடர்பான முத்தரப்பு இராணுவப் பயிற்சி ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இரண்டு வாரங்கள் நடக்கும் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி, தீவிரவாத முறியடிப்பு மற்றும் ஆயுதப்படைகளின் போர்க்கள அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில் முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது.
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் உள்ள பப்பி தேசிய தீவிரவாத முறியடிப்பு பயிற்சி நிலையத்துக்கு, நேற்று வருகை தந்த பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் ரஹீல் ஷரீப், ‘ஈகிள் டாஸ்-1’ (Eagle Dash-I) என என்ற குறியீட்டுப் பெயரில் நடத்தப்படும் இந்த முத்தரப்பு கூட்டுப் பயிற்சியைப் பார்வையிட்டுள்ளார்.
அவருடன், சிறிலங்கா இராணுவத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்றும், இந்த கூட்டுப் பயிற்சியைப் பார்வையிட்டுள்ளது.
எனினும், இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா படையினர் தரப்பில் எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விபரங்கள் வெளியிடப்படவில்லை.
அதேவேளை, பாகிஸ்தானில் சிறிலங்கா படைகள் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது குறித்த எந்த தகவலையும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.