ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்தது சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சி இன்று ஐக்கிய தேசிய முன்னணியுடன், கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளது.
அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஜனநாயக கட்சி சார்பில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இந்த கூட்டணி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அதேவேளை, ஐதேகவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியான போதும், அதுபற்றி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்று இரண்டு கட்சிகளும் தெரிவித்துள்ளன.
எனினும், வரும் 8ஆம் நாள் நடக்கவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.