யாழ்ப்பாணம் செல்லும் திட்டத்தைக் கைவிட்டார் சுஸ்மா
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் வரும் வெள்ளிக்கிழமை சிறிலங்காவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். ஒன்பதாவது இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே அவர் கொழும்பு வரவுள்ளார்.
இந்திய- சிறிலங்கா கூட்டுக் குழுவின் கூட்டம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரின் தலைமையில் வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
பொருளாதார ஒத்துழைப்பு, வர்த்தகம், சக்தி, மின்சக்தி, தொழில்நுட்பம், கடல்சார் ஒத்துழைப்பு, சமூக, கலாசார, மற்றும் கல்வி தொடர்பான விவகாரங்கள், விஞ்ஞான தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, சுகாதாரம், சிவில் விமானப் போக்குவரத்து, சுற்றுலா, மக்களுக்கிடையிலான தொடர்புகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர், மறுநாள் சனிக்கிழமை பிற்பகல் புதுடெல்லிக்குப் புறப்பட்டுச் செல்வார்.
இந்தப் பயணத்தின் போது, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க ஆகியோரையும் சுஸ்மா சுவராஜ் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக, சுஸ்மா சுவராஜ், வரும் 6ஆம் நாள் யாழ்ப்பாணம் செல்வார் என்று தகவல்கள் வெளியான போதும், அவரது யாழ். பயணத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.