மேலும்

வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்புக்கூற அரசியலமைப்பில் இடமில்லை – சிறிலங்கா பிரதமர்

ranil-pm-400-seithyவெளிநாட்டு நீதிபதிகள், தீர்ப்புகளை வழங்குவதற்கு சிறிலங்காவின் அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகளை பாதுகாப்பதிலும், ஊக்குவிப்பதிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்கு என்ற தொனிப்பொருளில் ஆசிய நாடுகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கான சிறப்பு செயலமர்வு நேற்று கொழும்பில் ஆரம்பமானது.

இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

“நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சிறிலங்கா  பயணித்துக் கொண்டிருக்கிறது.

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் எமது அரசாங்கம் எதனையும் மீறி செயற்படவில்லை.

எதிர்வரும் காலங்களிலும் இதற்கான சிறப்புப் பொறிமுறைகளை கையாள உத்தேசித்துள்ளோம்.

விசாரணைகளில்  அனைத்துலக நீதிபதிகளை இணைத்துக்கொள்வதா இல்லையா என்பதனை சிறிலங்கா அரசாங்கமே தீர்மானிக்கும்.  எனினும் இறுதித் தீர்மானம் உயர்நீதிமன்றத்தினால் எடுக்கப்படும்.

உள்நாட்டு விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்கேற்பதற்கு மட்டுமே அரசியலமைப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நீதிபதிகள் தீர்ப்பு வழங்குவதற்கு அரசியலமைப்பில் இடமளிக்கப்படவில்லை.

போர்க்குற்றங்கள் தொடர்பான கலப்பு நீதிமன்ற விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

வெளிநாட்டு நீதிபதிகளை தீர்ப்புக்களை அளிக்க அனுமதிப்பதாயின், மக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பை நடத்தி எமது அரசியலமைப்பில் திருத்தம் செய்ய வேண்டும்.

பொறுப்புக்கூறல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு, நீதித்துறையை வலுப்படுத்துவது முக்கியம். பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.

போர்க்கால மீறல்களுக்கு சரியானதொரு பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட்டால், சிறிலங்காவின் இறைமை பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *