நிதிக் குற்ற விசாரணைப் பிரிவைக் கலைக்க வேண்டும் – நிமால் சிறிபால டி சில்வா
நிதிக் குற்ற விசாரணைப் பிரிவை உடனடியாக கலைத்து விட வேண்டும் என்று, சிறிலங்கா அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,
”இந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு சட்ட ரீதியாக உருவாக்கப்படவில்லை. இது எமது வழக்கை விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டு வருவது போன்றது.
சட்ட வரையறைகளுக்கு அப்பாற்பட்டதாகவே நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு செயற்படுகிறது.
யோசித ராஜபக்சவுக்கு எதிராக விரைவில் வழக்குத் தாக்கல் செய்து முடிக்க வேண்டும். இப்போது யோசித ராஜபக்ச ஒரு சந்தேக நபர் தான்.
நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே, அவர் குற்றவாளியா இல்லையா என்பது மக்களுக்குத் தெரியும். அவருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரியவரும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.