உண்ணாவிரதப் போராட்டத்தை இடைநிறுத்தினர் அரசியல் கைதிகள்
தமது விடுதலைக்காக ஒன்பது நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகள், தமது போராட்டத்தை இன்று காலை தற்காலிகமாக இடைநிறுத்தியிருப்பதாக அறிவித்துள்ளனர்.
தமிழ் அரசியல் கைதிகள் போராட்டத்தை இடைநிறுத்தியிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ள ஒரு தொகுதி அரசியல் கைதிகளை புனர்வாழ்வுக்கு அனுப்பி விடுவிக்க சிறிலங்கா அரசாங்கம் முன்வந்த நிலையிலேயே அரசியல் கைதிகள் இந்தப் போராட்டத்தை நிறுத்தியுள்ளனர்.
இதற்கமைய அடுத்த 10 நாட்களுக்குள், 85 அரசியல் கைதிகள் புனர்வாழ்வுக்கு அனுப்பப்படுவர், மற்றொரு தொகுதியினர் பிணையில் விடுவிக்கப்படுவர்.
அதேவேளை, தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளில், 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களை விடுவிக்கலாம் என்ற, சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் பரிந்துரையையும் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டத்தை நிறைவேற்ற வரும் டிசெம்பர் 15ஆம் நாளுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாது போனால் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க நேரிடும் என்றும் அரசியல் கைதிகள் எச்சரித்துள்ளனர்.