இந்தியாவை கட்டுப்படுத்தவே சிறிலங்காவில் முதலீடு செய்கிறது சீனா – இந்திய விமானப்படைத் தளபதி
சிறிலங்காவிலும், ஏனைய தெற்காசிய நாடுகளிலும், சீனா மேற்கொள்ளும் முதலீடுகள், இந்தியாவைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான மூலோபாய நகர்வுகள் என்று இந்திய விமானப்படைத் தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா தெரிவித்துள்ளார்.
வான் சக்திகள் கற்கைகளுக்கான இந்திய நிலையத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“இந்தியாவைக் கட்டுப்படுத்தும் மூலோபாய நகர்வாகவே, சிறிலங்கா, பங்களாதேஷ், நோபாளம், பாகிஸ்தான், மற்றும் ஏனைய தெற்காசிய நாடுகளில் சீனா முதலீடுகளைச் செய்து வருகிறது.
இந்தியாவின் எல்லா அயல் நாடுகளுடனும், இராணுவ, பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி வருகிறது சீனா.
இந்தியாவின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்பு கொள்கைகளை அடிப்படையாக கொண்டு மூலோபாய நோக்கங்களை மனதில் கொண்டே, சீனா தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது.
திபெத்தில் துரிதமாக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி, டாவோசெங் யாடிங்கில் உலகின் உயரமான விமான நிலையம், திபெத்தில் உயரமான தொடருந்து பாதை, குவடார் துறைமுக அபிவிருத்தி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியான பொருளாதார மைய அபிவிருத்தி, சிறிலங்கா, நேபாளம், மியான்மார், பூட்டான் ஆகிய நாடுகளுடன் அதிகரிக்கும் பொருளாதார, இராணுவ உறவுகள் எல்லாமே, இந்தியாவைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் மூலோபாய நகர்வுகளாகும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.