32 அரசியல் கைதிகளுக்கு மீண்டும் விளக்கமறியல் – காற்றில் பறக்கும் சிறிலங்காவின் வாக்குறுதி
இன்று பிணையில் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த 32 தமிழ் அரசியல் கைதிகளும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல் நீதிமன்றத்துக்கு கிடைக்காததால் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இன்று காலையில் 32 தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் முன்னிறுத்தப்பட்டனர்.
எனினும், இவர்களை விடுதலை செய்யுமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால், நீதிமன்றத்துக்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை.
இதையடுத்து 32 அரசியல் கைதிகளையும், வரும் 24ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதிவான் உத்தரவிட்டார்.
இதனால், தமது உறவுகளைப் பிணையில் எடுக்க நீதிமன்றம் வந்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள், பெரிதும் கவலையடைந்தனர்.
31 தமிழ் அரசியல் கைதிகள் இன்று பிணையில் விடுவிக்கப்படுவார்கள் என்றும், சட்டமா அதிபர் திணைக்களம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாகவும், அமைச்சர் மனோ கணேசன் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.