மேலும்

அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு குறித்து விரைவில் முடிவு – கூட்டமைப்பிடம் மைத்திரி உறுதி

sampoor-ms (3)தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பது தொடர்பாக விரைவில் உறுதியான முடிவு அறிவிக்கப்படும் என்றும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் நேற்று நடந்த சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக கருத்து வெளியிட்ட  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்,எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்,

“நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் நேற்று சந்திப்பு ஒன்றை நடத்தினோம்.

தற்போது 214தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 32பேர் எதிர்வரும் திங்கட்கிழமை விடுதலை செய்யப்படவுள்ளனர். மேலும் 30பேர் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக விடுதலை செய்யப்படுவர்.

இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின் போது இணக்கம் காணப்படடுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில், 48பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டுள்ளனர்.

எஞ்சியோரின் விடுதலை தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு, சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளுக்கு அப்பால், அமைச்சரவை குழுவொன்றை நியமிப்பதாக இணக்கம் காணப்பட்டது.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பின்போது கைதிகளின் விடுதலை மற்றும் பொதுமன்னிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட வாக்குறுதிகள், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தோம்.

அதன்போது கருத்து  வெளியிட்ட சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்யப்படுவோர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் விடுதலை தொடர்பாக நடவடிக்கைளை எடுப்பதாகவும், தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைளை விரைவில் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்,“ என்று கூறினார்.

சிறிலங்கா அதிபருடனான சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *