மாலைதீவில் சினைப்பர் அணி சிப்பாய் கைது – மூடி மறைக்கும் சிறிலங்கா
சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதல் அணியைச் சேர்ந்த முன்னாள் சிப்பாய் ஒருவர், மாலைதீவில் கைது செய்யப்பட்டது தொடர்பான, தெளிவான தகவல்களை வெளியிட, சிறிலங்கா அரசாங்க, மற்றும் இராணுவத் தரப்பு மறுத்துள்ளது.
மாலைதீவில், சினைப்பர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்ட பின்னணியில், அங்கிருந்து வெளியேற முனைந்த சிறிலங்கா இராணுவத்தின் சினைப்பர் தாக்குதல் அணியைச் சேர்ந்த முன்னாள் சிப்பாய் ஒருவர் மாலைதீவு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேலாகியும், சிறிலங்கா அரசாங்கம் இதுபற்றிய தகவல்களை வெளியிடவில்லை.
மாலைதீவு ஊடகங்களில் இந்த செய்தி வெளியானதையடுத்து, இதுகுறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மகேஷினி கொலன்னவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதற்கு அவர், “கடந்த மாதம் 24 ஆம் நாள் இலங்கையர் ஒருவர் மாலைதீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் அவர் தொடர்பிலான தகவல்கள் மற்றும் குற்றச்சாட்டு தொடர்பிலான தகவல்களை வெளிப்படுத்த முடியாது’ என்று, தெரிவித்தார்.
அதேவேளை, இதுகுறித்து சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜெயநாத் ஜெயவீரவிடம் கேள்வி எழுப்பிய போது, சினைப்பர் அணி வீரர் கைது செய்யப்பட்டது குறித்து தமக்கு எந்த தகவலும் தரப்படவில்லை என்றும், மாலைதீவு அதிகாரிகளிடம் இருந்து தகவல்களை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.