இந்திய – சிறிலங்கா கடற்படைகளின் பாரிய கூட்டுப்பயிற்சி திருகோணமலையில் இன்று ஆரம்பம்
சிறிலங்கா- இந்திய கடற்படைகளுக்கு இடையிலான பாரிய கூட்டுப் பயிற்சி இன்று திருகோணமலைக்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் ஆரம்பமாகவுள்ளது.
SLINEX என்ற பெயரில், இந்திய, சிறிலங்கா கடற்படைகள் ஆண்டு தோறும் கூட்டுப் பயிற்சிகளை நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டுக்கான கூட்டுப் பயிற்சி இன்று தொடக்கம், எதிர்வரும் நொவம்பர் 1ஆம் நாள் வரை, திருகோணமலைக் கடற்பரப்பில் இடம்பெறவுள்ளது.
இந்தப் போர்ப் பயிற்சியில் பங்கேற்பதற்காக, இந்தியக் கடற்படையின் கோரா, கிர்பன் ஆகிய ஏவுகணைப் போர்க்கப்பல்கள் மற்றும் ஆழ்கடல் ரோந்துக் கப்பலான சாவித்ரி ஆகிய மூன்று போர்க்கப்பல்களும், திருகோணமலை துறைமுகத்துக்கு இன்று வந்துள்ளன.
அத்துடன் இந்தியக் கடற்படையின் கண்காணிப்பு விமானம் ஒன்றும் இதில் பங்கேற்கவுள்ளது.
அதேவேளை, சிறிலங்கா கடற்படையின் சயுர, சமுத்ர, சாகர ஆகிய போர்க் கப்பல்களுடன், இரண்டு அதிவேக பீரங்கிப் படகுகள், ஒரு ஏவுகணைப் படகு உள்ளிட்ட ஆறு போர்க்கப்பல்களும், ஆறு டோறா ரக அதிவேகத் தாக்குதல் படகுகளும், இந்தக் கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கின்றன.
அயல்நாட்டுக் கடற்படைகளுக்கு இடையில் காத்திரமான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டுப் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இருதரப்பும் ஆற்றல்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவும், பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்ளவும் இந்தக் கூட்டுப் பயிற்சி பயனுடையதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.