மூன்று விசாரணைக் குழுக்களின் அறிக்கைகள் – நாடாளுமன்றில் சமர்ப்பித்தார் ரணில்
சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்திய மூன்று முக்கிய விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் குறித்து, ஐ,நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால் நடத்தப்பட்ட விசாரணையின் அறிக்கை, மற்றும் சிறிலங்காவின் முன்னாள் அதிகர் மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட மக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு மற்றும் நிசங்க உடலகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கைளே இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றபப்பட்ட தீர்மானம் தொடர்பாக வரும் வியாழக்கிழமை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையிலேயே, இந்த அறிக்கைகளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதேவேளை, ஜெனிவாவில் சிறிலங்காவின் அனுசரணையுடன் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தீர்மானத்தின் பிரதியை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.