மேலும்

பிள்ளையானை நாளை வரை தடுத்து வைத்து விசாரிக்க சிறிலங்கா காவல்துறை முடிவு

pillayanமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் நாளை வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படவுள்ளார்.

நேற்றுமுன்தினம் மாலை, கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற பிள்ளையான், உடனடியாகவே கைது செய்யப்பட்டார்.

அவரிடம், நேற்றும் இன்றும் தொடர்ந்து விசாரணைகள் நடத்தப்பட்டன. இன்னும் விசாரணைகள் தொடர்ந்து வருவதால், அவரை நாளை வரை தடுத்து வைத்திருக்க சிறிலங்கா காவல்துறை முடிவு செய்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், நாளை மாலை வரை அவரைத் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரம் சிறிலங்கா காவல்துறைக்கு இருப்பதால், அவர் இன்றும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.

அதேவேளை,  பிள்ளையானை நீதிமன்றத்தில் நிறுத்தி, மேலதிக விசாரணைக்காக அவரைத் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி கோருவதா இல்லையா என்று, நாளையே விசாரணை அதிகாரிகள் முடிவு செய்வர் என்று சிறிலங்கா காவல்துறையின் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையிலும் பிள்ளையானுக்குத் தொடர்புகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவிராஜ் படுகொலையின் பிரதான சூத்திரதாரி என்று கூறப்படும், தற்போது சுவிற்சர்லாந்தில் தங்கியுள்ள சேரன், பிள்ளையானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்றும் விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், குற்றப் புலனாய்வுப் பிரிவு வட்டாரங்களை மேற்கோள்காட்டும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *