மன்னார் கடற்படுகையில் எண்ணெய் அகழ்வுப் பணிகளில் இருந்து வெளியேறுகிறது இந்திய நிறுவனம்
மன்னார் கடற்படுகையில், எண்ணெய் அகழ்வு முயற்சியில் ஈடுபட்டிருந்த கெய்ன் இந்தியா நிறுவனம், சிறிலங்காவில் இருந்து வெளியேறவுள்ளது.
கெய்ன் இந்தியா நிறுவனம் மன்னார் கடற்படுகையில் நான்கு துளைகளை இட்டு, எண்ணெய் அகழ்வு மேற்கொள்வது குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நான்கு துளைகளில், இரண்டில் மட்டும், எரிவாயு உற்பத்தி செய்வதற்காக சாத்தியங்கள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
எனினும், அந்த கிணறுகளில், இருந்து எரிவாயுவை உற்பத்தி செய்வது வணிக ரீதியில் இலாபகரமானதாக அமையாது என்று ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, மன்னார் கடற்படுகையில் தாம் மேற்கொண்டு வந்த எண்ணெய் எரிவாயு அகழ்வுப் பணிகளில் இருந்து விலகிக் கொள்ள கெய்ன் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்த மாத இறுதியுடன் சிறிலங்காவில் இருந்து இந்த நிறுவனம் வெளியேறவுள்ளதாக அறிவித்துள்ளது.