யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமனம்
கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயராக வண.ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளதாக, வத்திக்கான் வானொலி அறிவித்துள்ளது.
கத்தோலிக்கத் திருச்சபையின் முதல்வரான பாப்பரசர் முதலாவது பிரான்சிஸ், யாழ். மறைமாவட்டத்தின் புதிய ஆயரின் நியமனம் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
யாழ். மறைமாவட்ட குருமுதல்வராகப் பணியாற்றும், 67 வயதான வண. ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார், தற்போதைய ஆயர் வண. தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகையிடம் இருந்து இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.
1981ஆம் ஆண்டு தொடக்கம் மன்னார் மறை மாவட்ட ஆயராகப் பணியாற்றிய வண.தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை, 1992ஆம் ஆண்டு தொடக்கம் யாழ்.மறை மாவட்ட ஆயராகப் பணியாற்றி வருகிறார்.
அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே, ஓய்வுபெறும் வயதான 75 வயதை எட்டியிருந்தார். இந்த நிலையிலேயே அவர் ஆயர் பணியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
அவரது இடத்துக்கு புதிய ஆயராக வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அடிகளார் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் ஊர்காவற்றுறை கரம்பனைப் பிறப்பிடமாக கொண்டவர். இளவாலை ஹென்றியரசர் கல்லூரி, யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி ஆகியவற்றின் அதிபராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.