மேலும்

கிரித்தல இராணுவ புலனாய்வு முகாமுக்குள் தேடுதல் நடத்த நீதிமன்றம் அனுமதி

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்திச் செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த, கிரித்தல இராணுவப் புலனாய்வு முகாமில் ஆய்வுகளை மேற்கொண்டு ஒளிப்படம் எடுக்கவும், அங்குள்ள இராணுவ ஆவணங்களைப் பரிசீலிக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவு இது தொடர்பாக விடுத்திருந்த கோரிக்கைக்கு, ஹோமகம நீதிமன்றம் நேற்று  இந்த அனுமதியை வழங்கியது.

அத்துடன், கிரித்தல இராணுவ முகாமில் விசாரணைகளை மேற்கொள்ளும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு, தேவையான வசதிகளை வழங்குமாறும், அவர்களுக்கு இராணுவக் காவல்துறையின் பாதுகாப்பை வழங்க உத்தரவிடுமாறும், சிறிலங்கா இராணுவத் தளபதிக்கும், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக,  2 லெப்.கேணல்கள் உள்ளிட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் 10 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில், பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா  எக்னெலிகொடவின் சட்டவாளர், கிரித்தல இராணுவ முகாமில்  விசாரணைகளை நடத்தவும், ஒளிப்படம் எடுக்கவும், குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்து நீதிமன்றம் அங்கு விசாரணைகளை நடத்த அனுமதியளித்துள்ளதால், அந்த இராணுவ முகாமுக்கு வந்த, வெளியேறிய இராணுவ அதிகாரிகள் பற்றிய பதிவேடுகள், பிரதான வாயில் பதிவேடுகள் உள்ளிட்ட பல் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படவுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *