மேலும்

அனைத்துலகத்தை வெற்றி கொண்டு விட்டோம் – அமைச்சர் ராஜித சேனாரத்ன

rajitha-senarathnaஅமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாகவே இராஜதந்திரங்களை வகுக்கின்றன, இந்தியப் பெருங்கடல் விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வராது என்று சிறிலங்காவின் அமைச்சரவை இணைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

சமாதானத்துக்கான மக்கள் இயக்கம் கொழும்பில் நேற்று ஏற்பாடு செய்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,

எவராலும் வீழ்த்தவே முடியாது என்று கருதப்பட்ட இராஜதந்திரத்தை நாம் தோற்கடித்தோம்.

போரின் முதற்கட்டத்தை ஜனவரி 9ஆம் நாள் வெற்றிக் கொண்ட நாம், ஓகஸ்ட் 17 ஆம் நாள் இரண்டாம் கட்டத்தையும் வெற்றிக்கொண்டோம்.

தற்போது அனைத்துலகத்தையும் வெற்றி கொண்டுள்ளோம்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச அனைத்துலகத்தை கைக்குள் போடுவதாக கூறிக் கொண்டு சீனாவை மாத்திரமே அரவணைத்து கொண்டு செயற்பட்டார்.

சிறிலங்கா உற்பத்திகள் அதிகளவில் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்குமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. சீனாவுக்கு சிறிலங்காவின் உற்பத்திகள் 7 சதவீதமே ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது சீனா தனது பொருளாதார கொள்கையை மறுசீரமைத்துள்ளது. அதனால் வெளிநாட்டு உற்பத்திகளுக்கு கட்டுப்பாடு விதிக்க போகிறது.

எனவே மகிந்தவின் மோசமான பொருளாதார கொள்கைகளிலிருந்து மக்களை பாதுகாத்துள்ளோம்.

இந்தியாவைப் பகைத்து கொண்டே முன்னைய ஆட்சி செயற்பட்டது. மனித உரிமை விவகாரத்தில் இந்தியாவுடன் அமெரிக்காவுடனும் மிகவும் ஆழமான உறவை மேற்கொண்டோம்.

இந்தியப் பெருங்கடல் விவகாரங்களில் இந்தியாவின் ஆலோசனை இல்லாமல் எந்தவொரு தீர்மானத்தையும் அமெரிக்கா கொண்டு வராது. அமெரிக்காவும் இந்தியாவும் ஒன்றாக இராஜதந்திரங்களை வகுகின்றன .

அமெரிக்காவின் முதலாவது தீர்மான வரைவு காரம் கூடியதாகவே இருந்தது.

எனினும் புதிய அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளினால் அதனை முழுமையாக மாற்றியுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *