தரைவழிப் பாலம் அமைக்கும் இந்தியாவின் திட்டம் – சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆலோசனை
தமிழ்நாட்டையும், இலங்கைத் தீவையும் தரைவழி பாலம் மற்றும் கடலடிச் சுரங்கம் மூலம் இணைக்கும் இந்தியாவின் திட்டம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரவை விரைவில் ஆராயவுள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன, சீனாவின் சின்ஹுவா செய்தி நிறுவனத்துக்கு தகவல் வெளியிடுகையில்,
“இந்த திட்டம் தொடர்பாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் புதுடெல்லிக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, இந்திய அரசாங்கம் கலந்துரையாடியிருந்தது.
இதுகுறித்து விரைவில் சிறிலங்கா அமைச்சரவையில் கலந்துரையாடப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.
இராமேஸ்வரத்தையும், தலைமன்னாரையும் இணைக்கும், தரைவழி மற்றும் தொடருந்து பாலத்தை அமைக்கும் திட்டத்தை இந்தியா முன்மொழிந்துள்ளது.
இந்த 23 கி.மீ பாலத்தை அமைக்கும், சுமார் 5 பில்லியன் ரூபா திட்டம் தொடர்பான சமூக பொருளாதார சாத்திய ஆய்வை மேற்கொள்வதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி ஆர்வம் காட்டுவதாகவும், செய்திகள் தெரிவிக்கின்றன.