அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க அவுஸ்ரேலியா முடிவு
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கப் போவதாக அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜுலி பிஷப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் பணியகத்தினால், அண்மையில் வெளியிடப்பட்டுள்ள சிறிலங்கா குறித்த அறிக்கையின் கண்டறிவுகள், தொடர்பாக அவுஸ்ரேலியா கவனம் செலுத்தியுள்ளது.
சிறிலங்காவின் உள்நாட்டுப் போரில், இரண்டு தரப்புக்களாலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிராக குற்றங்கள் இழைக்கப்பட்டிருக்கலாம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா தொடர்பாக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா முன்வந்தமை பாராட்டுக்குரியது.
அத்துடன் உண்மையை கண்டறிதல், இழப்பீடு வழங்குதல், நீதியை நிலைநாட்டுதல் உள்ளிட்ட பொறிமுறையை முன்னெடுப்பது குறித்து சிஜறிலங்கா அளித்துள்ள வாக்குறுதிகள் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளோம்.
இந்த பொறிமுறை செயற்பாட்டு ரீதியாக நடைமுறைப்படுத்தப்பட்டால், இலங்கையர்கள் அனைவரும் இதய சுத்தியுடனான நல்லிணக்கத்தை அடைவதற்கு களம் அமையும்.
அந்தவகையில் தற்போது ஐ.நா மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானத்துக்கு ஆதரவு வழங்குவதற்கும் இணை அனுசரணை வழங்குவதற்கும் அவுஸ்திரேலியா தீர்மானம் எடுத்துள்ளது.
மேலும் சிறிலங்காவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு உதவி வழங்கவும் தயாராக இருக்கினறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.