ஐ.நா பொதுச்செயலரை சந்தித்தார் மைத்திரி
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இச்சந்திப்பு ஐ.நா பொது அமர்வுக்குப் புறம்பாக நேற்றைய தினம் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் அண்மைய நாட்களில் இடம்பெறும் அரசியல் மாற்றங்கள் தொடர்பாக ஐ.நா செயலாளர் நாயகம் கலந்துரையாடினார்.
அத்துடன் சிறிலங்காவில் இடம்பெற்ற தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதற்காக பான் கீ மூன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
இதற்கும் அப்பால் சிறிலங்காவின் தேசிய ஒற்றுமை, மீளிணக்கப்பாடு மற்றும் நல்லாட்சி தொடர்பாகவும் பான் கீ மூன் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். சிறிலங்காவில் நீண்ட கால நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு முக்கியமாகத் தேவைப்படும் அரசியல் தீர்வு மற்றும் ஏiனைய தேவைப்பாடுகளை எவ்வித காலதாமதமுமின்றி மேற்கொள்ளுமாறும் பான் கீ மூன், சிறிசேனவிடம் வலியுறுத்தினார்.
சிறிலங்காவின் தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை நோக்கிய நிலையான அபிவிருத்திக்காக சிறிசேனவால் வழங்கப்படும் ஒத்துழைப்பிற்கும் பான் கீ மூன் தனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற இவ்விரு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பில், சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் ஏனைய மீறல்கள் தொடர்பான சிறிலங்காவின் அடுத்த கட்ட நகர்வு தொடர்பாக முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.