மேலும்

வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு சிறிலங்கா இணக்கம் – தீர்மானத்துக்கும் இணை அனுசரணை

ranilகொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு விசாரணையை நடத்த வலியுறுத்தி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு ஆதரவளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றிரவு நடந்த நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,

“கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு தரப்புகளின் ஆதரவுடன் உள்நாட்டு நீதிப் பொறிமுறையின் கீழ் விசாரணையை நடத்துவது தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முக்கியமான நாடுகளுடன் புரிந்துணர்வுக்கு சிறிலங்கா வந்திருக்கிறது.

இந்த விடயத்தில் அனைத்துலக சமூகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்கப்படும்.

நாம் நீண்டகாலத்துக்கு அழுத்தங்களுக்கு முகம் கொடுக்க முடியாது. நாம் கடந்த ஐந்து, ஆறு ஆண்டுகளாக அழுத்தங்களை எதிர்கொண்டு வருகிறோம்.

பிரதான மீறல்கள் குறித்து, சிறிலங்காவின் நீதிப் பொறிமுறையின் கீழ், நாட்டின் சொந்த சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு,  விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.

இதில் இலங்கையர்களுடன் வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், சட்டவாளர்களும் பங்கேற்பர்.

ஆனால் இவை அனைத்தும், சிறிலங்காவின் சட்டங்களுக்கு அமையவே இடம்பெறும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை ஊக்குவிக்க, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்துக்கு சிறிலங்கா இணை அனுசரணை வழங்கும் என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *