மேலும்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மான வரைவு- முழுமையாக

eagle-flag-usaசிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைதகள் பேரவையில், அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து நாடுகள் இணைந்து புதிய- திருத்தப்பட்ட- தீர்மான வரைவை நேற்றுமாலை சமர்ப்பித்துள்ளன.

வெளிநாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டவாளர்களின் பங்களிப்புடன், விசாரணைப் பொறிமுறையை அமைக்க வலியுறுத்தும் இந்தப் புதிய தீர்மான வரைவு அடுத்த வாரம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும்.

இந்த தீர்மான வரைவின் முழுவடிவம்.

30ஆவது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை – வரைவுத் தீர்மானம்

சிறிலங்காவில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகளை ஊக்குவித்தல்

1. ஐ.நா மனித உரிமைப்பேரவையின் 27ஆவது அமர்வுகளில் சிறிலங்காவில் நல்லிணக்கத்தையும் குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களையும் ஏற்படுத்த வேண்டுமெனக் கோரி ஐ.நா மனித உரிமை பேரவையின் 25/1 தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் ஆணையாளர் வழங்கிய வாய்மொழி அறிக்கை மற்றும் சிறிலங்கா குறித்தஐ.நா மனித உரமை ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கை என்பனவற்றை கவனத்தில் கொள்கிறோம். அந்தவகையில் மனித உரிமைப் பேரவையின் 25/1 தீர்மானத்துக்கு அமைய முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்கா அரசாங்கத்தை கோருகிறோம்.

2. உண்மையை கண்டறியும் விடயத்தில் 2015 ஆம் ஆண்டிலிருந்து சிறிலங்காவுக்கும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்துக்கும் இடையிலான ஈடுபாடு வரவேற்கப்பட வேண்டியது.

3. நீதியை நடைமுறைப்படுத்துவதில் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கப்படும். பாதிக்கப்பட்டவர்கள், சிவில் சமூகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனும் விரிவான தேசிய கலந்துரையாடல்களின் ஊடாக இதனைச் செய்ய முடியும். அனைத்துலக நிபுணர்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ள முடியும். சாட்சிகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் வலுவான ஓர் பாதுகாப்புப் பொறிமுறைமை அவசியமானது.

4. நல்லிணக்கம் கடந்தகால பிரச்சினைகள் மீள இடம்பெறாமல் இருத்தல் காணாமல்போனோர் குறித்த பணியகம் உள்ளிட்ட விடயங்கள் வரவேற்கப்பட வேண்டியவை. பக்கச்சார்பற்ற நேர்மையான விசாரணைப் பொறிமுறைமை மற்றும் நீதிமன்றக் கட்டமைப்பின் மூலம் விசாரணைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும். இதற்கு அனைத்துலக உதவிகளையும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் தொழில்நுட்ப உதவிகளையும் பெறலாம்.

5. ஐ.நா. விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மீறல்கள், துஸ்பிரயோகங்கள் குறித்தும் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க செயல்முறைகளின் போது கவனத்தில் எடுக்க வேண்டும்.

6.கொமன்வெல்த் மற்றும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணையாளர்கள் சட்டவாளர்களுடன் உள்நாட்டு நீதித்துறை கட்டமைப்புடன் கூடிய விசாரணை பொறிமுறையை முன்னெடுக்க வேண்டும்.

7. அனைத்துலக மனிதாபிமான சட்டங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக தண்டனை விதிக்க உள்நாட்டு சட்டங்களை திருத்தி அமைக்க வேண்டும். குறிப்பாக உள்நாட்டு அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

8. பாதுகாப்புத் துறைசார் விவகாரங்களில் காத்திரமான மாற்றங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்த வேண்டும். பாரிய மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாக அடையாளப்படுத்தப்படும் பாதுகாப்பு அதிகாரிகள் உயர் பதவிகளில் அமர்த்தப்படக் கூடாது. குறிப்பாக தற்காலிக நீதிப் பொறிமுறைமையில் அனைத்துலக மனிதாபிமான சட்டங்களை மீறிய படை அதிகாரிகள், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளடக்கப்படக் கூடாது.

9. சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் புதிய சட்டத் திருத்தம் வரவேற்கப்பட வேண்டியது. இந்தக் சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது அவசியமானது. பாதுகாப்பு தரப்பினர், அரச அதிகாரிகளுக்கு எதிராக சாட்சியமளிப்பவர்கள் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டங்கள் பலப்படுத்தப்பட வேண்டும்.

10.அரசாங்கப் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கன. குறிப்பாக பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு முழுமையான அகற்றப்பட வேண்டும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டும்

11. ஊடகவயிலாளர்கள், ஊடக நிறுவனங்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிறுபான்மை மத இன சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பள்ளிவாசல்கள், கோயில்கள், தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டியதுடன், மீளவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுக்க வேண்டும்.

12. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்தல் மற்றும் ரத்து செய்தல் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு வரவேற்கப்பட வேண்டியது. அனைத்துலக சட்டங்களின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட முடியும்.

13. பலவந்த கடத்தல்கள் தொடர்பிலான அனைத்துலக பிரகடனத்தில் கைச்சாத்திட சிறிலங்கா அரசாங்கம் காட்டும் முனைப்பு வரவேற்கப்பட வேண்டியது. காணாமல் போனவர்கள் தொடர்பாக உறவினர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும்.

14. கடந்த காலத்தில் விசாரணை நடத்தப்பட்ட அதிபர் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் அளித்த வாக்குறுதி வரவேற்கப்பட வேண்டியது.

15. மனித உரிமை மீறல்கள் மற்றும் அனைத்துலக மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட அனைத்து ஆவணங்கள் அறிக்கைகளையும் பேணிப் பாதுகாக்கும் பொறிமுறைமை ஒன்றை அரசாங்கம் உருவாக்க வேண்டும். தனியார் அல்லது பொது நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட அறிக்கைகள் அனைத்து பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும்.

16. அரசியல் அதிகாரத்தை பகிர்ந்தளிக்கக் கூடிய வகையில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்றை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும். அவ்வாறு அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பதன் மூலமே நாட்டின் அனைத்து மக்களும் மனித உரிமைகளை அனுபவிக்க முடியும். 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ளிட்ட அனைத்து மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.

17. அனைத்துலக மனித உரிமை சட்டம் அனைத்துலக மனிதாபிமான சட்டம் என்பவை மீறப்படக்கூடாது என இராணுவத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் அறிவுறுத்தப்பட வேண்டும். அனைத்து வகையிலான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் பால் நிலைசார் ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்க சிறிலங்காவை ஊக்கப்படுத்த வேண்டும். பால் நிலை ஒடுக்குமுறை சித்திரவதைகளில் ஈடுபடுபவர்களை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

18. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம், சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலைமைகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்ய வேண்டும். ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது மதிப்பீடு செய்யப்பட வேண்டும். குறிப்பாக குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த நிலைமைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் 32 ஆவது அமர்வுகளின் போது வாய்மொழி மூல அறிக்கையை ஐ.நா மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்க வேண்டும். பரிந்துரைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து 34ஆவது அமர்வுகளில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.

19. சிறிலங்கா அரசாங்கம் விசேட ஆணையாளர்களுடன் ஒத்துழைப்புடன் செயற்பட ஊக்குவிக்கிறோம். சில பிரதிநிதிகள் நீண்ட காலத்திற்கு முன்னதாக சிறிலங்காவுக்கு பயணம் செய்ய விடுத்த கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

20. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சிறப்பு அறிக்கையாளா்கள், ஆணையாளர்கள் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆலோசனைகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *