மேலும்

இரண்டாவது தீர்மான வரைவை இன்று பேரவையில் சமர்ப்பிக்கிறது அமெரிக்கா

UNHRC-meeting-roomஅமெரிக்கா தயாரித்துள்ள இரண்டாவது வரைவுத் தீர்மானம் குறித்து இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில், இன்று அந்த தீர்மான வரைவு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகளுக்கு ஊக்கமளித்தல் என்ற தலைப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்  கொண்டு வருவதற்கான அமெரிக்காவின் தீர்மான வரைவு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.

இந்த வரைவு தொடர்பாக, கடந்த திங்கள், மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முறைசாரா கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இதன் போது சிறிலங்காவும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகளும், தீர்மான வரைவில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தின.

இரண்டாவது முறைசாரா கூட்டத்தில் கலந்து கொண்ட சிறிலங்கா பிரதிநிதி, தீர்மான வரைவில் இடம்பெற்றுள்ள 26 செயற்பாட்டு பந்திகளில், 14 பந்திகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அத்துடன், தீர்மான வரைவில் மேலும் பல பகுதிகளை திருத்தம் செய்யவும், மொழி நடையில் மாற்றம் செய்யவும் சிறிலங்கா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், சிறிலங்கா கேட்டுக் கொண்ட சில மாற்றங்களை உள்ளடக்கியதாக இரண்டாவது திருத்தப்பட்ட வரைவைத் தயாரிப்பது குறித்த பேச்சுக்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதாக அறியப்படுகிறது.

சிறிலங்காவும், தீர்மான வரைவுக்கு இணை அனுசரணை வழங்கும் நாடுகளும், இந்த வரைவு வாசகங்கள் தொடர்பாக இணக்கம் கண்டால், இரண்டாவது வரைவு குறித்த பேச்சுக்கள் நிறைவடைவதுடன், இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வுக்கான தீர்மான வரைவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி காலக்கெடு இன்றுடன் நிறைவடையவுள்ளது.

இந்தநிலையில், சிறிலங்காவுடன் இணக்கப்பாடு எட்டப்படாத பட்சத்திலும், இரண்டாவது வரைவு இன்று பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த தீர்மான வரைவு தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு மற்றொரு முறைசாரா கலந்துரையாடலுக்கும் அமெரிக்கா ஒழுங்கு செய்துள்ளது.

இதன் பின்னர், பேரவையில் இறுதியான தீர்மான வரைவு சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *