மேலும்

போர்க்குற்ற விசாரணையில் அனைத்துலக தலையீட்டுக்கு இடமில்லை – சிறிலங்கா பிரதமர் ரணில்

ranil-parliamentசிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பான சிறிலங்கா அரசாங்கத்தின் நிலைப்பாட்டை விபரித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய அவர்,

குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு விசாரணைகளே முன்னெடுக்கப்படும். அதில் அனைத்துலகத் தலையீடுகள் இருக்காது.

ஊடகங்கள் தான் கலப்பு நீதிமன்றம் என்கின்றன. ஆனால், கலப்பு நீதிமன்றம் அமைக்கப்படாது.

சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது.

இதுபற்றி ஜெனிவாவில் கலந்துரையாடப்படுகிறது. அதுபற்றி கதைக்க நான் விரும்பவில்லை.

ஆனால் சிறிலங்காவின் இணக்கப்பாட்டுடன் அமெரிக்கா தீர்மானத்தைக் கொண்டு வரும் என்று நம்புகிறேன்.

இந்த தீர்மானத்துக்கு அனைத்து நாடுகளினதும் ஆதரவை அமெரிக்கா பெற வேண்டும்.

இதுபற்றி அண்மையில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புடன் நானும், வெளிவிவகார அமைசச்சர் மங்கள சமரவீரவும் கலந்துரையாடியிருக்கிறோம்.

சிறிலங்காவுக்கு ஆதரவான தீர்மானத்துக்கு ரஷ்யாவும், சீனாவும் ஆதரவு வழங்கும் என்று நம்புகிறோம்.

இந்தியாவுடனும் இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளேன். அவர்களின் ஆதரவும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், ஐ.நா விசாரணை அறிககை தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *