சிறிலங்காவில் நிகழ்ந்தது இனப்படுகொலை இல்லையா? – ஐ.நா பேச்சாளர் பதில்
சிறிலங்காவில் இடம்பெற்றது இனப்படுகொலையா என்பது, நாம் பரிந்துரைத்துள்ள கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கிய குற்றவியல் விசாரணைகளின் பின்னரே கண்டறியப்பட வேண்டும் என்று, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணயகத்தின் பேச்சாளர் ரவினா சம்தாசனி தெரிவித்துள்ளார்.
ஐ.நா விசாரணை அறிக்கையில் இனப்படுகொலை குறித்த எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாதமை குறித்து எழுந்துள்ள விமர்சனங்கள் தொடர்பாக ‘தி ஹிந்து’ நாளிதழ் எழுப்பிய கேள்விக்கு. மின்னஞ்சல் மூலம் அளித்த பதிலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“சிறிலங்காவில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்று ஐ.நா அறிக்கை கூறவரவில்லை.
நாம் பரிந்துரைத்துள்ள, கலப்பு நீதிமன்றத்தை உள்ளடக்கிய மேலதிக குற்றவியல் விசாரணையின் பின்னரே, அதுபற்றிக் கூற முடியும்.
இனப்படுகொலை என்பதை வரையறுப்பதற்கு சில விடயங்கள் உள்ளன.
எம்மால் சேகரிக்கப்பட்ட- எமக்கு கிடைத்த தகவல்களை ஆராய்ந்த போது, இனப்படுகொலைகள் இடம்பெற்றதான முடிவுக்கு வரத் தக்க காரணிகள் இருக்கவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.