மங்களவும், விஜேதாசவும், மின்சார நாற்காலியில் இருந்து மகிந்தவை காப்பாற்றியுள்ளனர் – ரணில்
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்சவுமே, மின்சார நாற்காலியில் இருந்து காப்பாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.
கொழும்பில் உள்ள ஐதேக தலைமையகத்தில் நேற்று பிற்பகல் நடந்த ஐதேகவின் செயற்குழுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஐ.நா விசாரணை அறிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக கூட்டப்பட்ட இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஒருவேளை இவர்களும் ராஜபக்சவைப் போன்று தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால், அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று நகைச்சுவையாக குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வு சிறிலங்கா அரசாங்கத்துக்கு வெற்றியாக அமைந்துள்ளதாகவும், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கு சிறிலங்கா அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் இணங்கி வந்திருப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
”சிலர் கலப்பு நீதிமன்றம் என்ற ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குகின்றனர். இதுபற்றி இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை.
எம்மால் உள்நாட்டு விசாரணையை நடத்த முடியும். அதில் எந்த சந்தேகமும் இருக்கக்கூடாது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.