பிரகீத் கடத்தல் குறித்து இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைமைக்குத் தெரியாதாம்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனமை தொடர்பாக சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கு எதுவும் தெரியாது என்று சிறிலங்கா குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்தவாரம் இராணுவப் புலனாய்வு அதிகாரி ஒருவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று நடத்திய விசாரணைகளில் இந்த தகவல் கிடைத்துள்ளதாக, சிறிலங்கா காவல்துறை தலைமையக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள, இரண்டு மூத்த இராணுவ அதிகாரிகள், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கொழும்பு வந்து, கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றதைப் பற்றி இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.
அதேவேளை, எக்னெலிகொட விடுதலைப் புலிகளுடன் எந்த தொடர்பையும் கொண்டிருந்திருக்கவில்லை என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் முரண்பாடான தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு கட்டளையிட்டவர்கள் பற்றிய விடயங்களை கண்டறியும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
ஏற்கனவே குற்றப் புலனாய்வுப் பிரிவு, இந்தக் கடத்தல் குறித்து இராணுவத்துக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள 50 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளது.