முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளரிடம் ஆறு மணிநேரம் விசாரணை
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பணிப்பாளர் பிரிகேடியர் அருண வன்னியாராச்சியிடம் ஆறு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்ட அவரிடம், காவல்துறை அதிகாரிகள் ஆறு மணிநேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் ஒன்றையும் பதிவு செய்துள்ளனர்.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட காலப் பகுதியில், சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக பிரிகேடியர் அருண வன்னியாராச்சியே பணியாற்றியிருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய 10 அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.