மகிந்தவுடன் இப்போது மிஞ்சியுள்ள 47 பேர்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
”சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 36 நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய அரசாங்கத்தில் அமைச்சர் அல்லது இராஜாங்க அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர் பதவியையோ, மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவியையோ ஏற்காமல் உள்ளனர்.
அவர்கள் நிச்சயமான எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளுவர். மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள ஏனைய கட்சிகளின் 11 உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர்ந்து கொள்ளவுள்ளனர்.
எமக்கு எதிர்க்கட்சித் தலைவர் வழங்கப்படாவிடினும், இந்தக் குழுவினர் எதிர்க்கட்சிக்குரிய பொறுப்புணர்வுடன் செயற்படுவர்.” என்றும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இரா.சம்பந்தனிடம் இருந்து, பறிக்கும் வரை ஓயப் போவதில்லை என்றும், அது தொடர்பாக சபாநாயகருடன் தாம் பேச்சுக்களை நடத்தி வருவதாகவும், மகிந்த ஆதரவு அணியைச் சேர்ந்த விமல் வீரவன்ச மற்றும் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.