மேலும்

பிரகீத் கடத்தல்- மேலும் மூன்று சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் கைது

prageeth eknaligodaஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்படிவம் தொடர்பாக மேலும் மூன்று சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட 2010ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நாள் ராஜகிரியவில் வைத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டு, கிரித்தல இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார்.

அங்கு மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், காணாமற்போகச் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக, ஏற்கனவே, ஓய்வு பெற்ற இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவரையும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து செயற்பட்ட முன்னாள் புலிகள் இவுரையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இரண்டு லெப்.கேணல் அதிகாரிகள் உள்ளிட்ட 4 இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்தநிலையில், மேலும் மூன்று சந்தேகநபர்களைத் தேடி அவர்களின் வீடுகளுக்கு குற்றப்புலனாய்வுத் துறையினர் சென்றனர்.

எனினும் அவர்களை அங்கு கைது செய்ய முடியாத நிலையில், நேற்று முன்தினம், அவர்கள் சட்டவாளர்கள் மூலம், காவல்துறையிடம் சரணடைந்தனர்.

இதையடுத்து, இவர்களை கைது செய்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய ஓய்வு பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *