சீனாவைத் தொடர்ந்து பாதுகாப்பு நாளைக் கொழும்பில் கொண்டாடியது பாகிஸ்தான்
சீனாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் சிறிலங்காவில் தனது பாதுகாப்பு நாளை பிரமாண்டமான முறையில் கொண்டாடியுள்ளது. பாகிஸ்தானின் 50ஆவது பாதுகாப்பு நாள் நேற்று கொழும்பில் கொண்டாடப்பட்டது.
கலதாரி விடுதியில் நேற்று மாலை நடந்த இந்த விழாவுக்கு கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
இந்த நிகழ்வில் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் பி.எம்.யு.டி.பஸ்நாயக்க, முப்படைகளின் தளபதிகள், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அரசியல்வாதிகள், படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த விழாவில், பாகிஸ்தானின் 50ஆவது பாதுகாப்பு நாளை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டது.
பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் சையிட் சகீல் ஹுசேன், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அலவி மௌலானா, சிறிலங்காவின் கூட்டுப்படைகளின் தளபதி எயர் சீவ் மார்ஷல் கோலித குணதிலக ஆகியோர் இணைந்து இந்த கேக்கை வெட்டினர்.
கடந்த ஜுலை 28ஆம் நாள் கொழும்பில் உள்ள கிங்ஸ்பெரி விடுதியில், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 88 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றிருந்தன.
இதன் தொடர்ச்சியாக, பாகிஸ்தானும், தனது நாட்டின் பாதுகாப்பு நாள் விழாவை கொழும்பில் கொண்டாடியுள்ளது.
இவ்விரு நாடுகளும், சிறிலங்காவில் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு முக்கிய பங்காற்றியிருந்தன.
சீனாவின் உதவியின்றி போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நேற்று முன்தினம் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.