பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகினார் சுசில் பிரேமஜெயந்த
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து விலகிக் கொள்வதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுசில் பிரேமஜெயந்த, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 24ஆம் நாளிடப்பட்ட பதவி விலகல் கடிதத்தை, சுசில் பிரேம ஜெயந்த சிறிலங்கா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
முன்னதாக, கடந்த 14ஆம் நாள், சுசில் பிரேமஜெயந்தவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் பதவியில் இருந்து நீக்குவதாகவும், அவருக்குப் பதிலாக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவை பதில் பொதுச்செயலராக நியமிப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
எனினும், தானே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் என்று வாதிட்டு வந்த சுசில் பிரேமஜெயந்த, நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் தாவியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ள நிலையில், நேற்று அவர் தனது பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசியப் பட்டியல் அசனங்களில் பங்காளிக் கட்சிகள் புறக்கணிக்கப்பட்டது கூட்டணி உடன்பாட்டை மீறும் செயல் என்று சுசில் பிரேமஜெயந்தவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப் போவதாக விமல் வீரவனச் எச்சரித்திருந்தார்.
எனினும், தேசியப் பட்டியல் நியமனங்களுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் சுசில் பிரேமஜெயந்த தெரிவித்துள்ளார்.