சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டது
சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவு (Presidential Security Division – PSD) முற்றாக கலைக்கப்பட்டுள்ளதாக பொது ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் அதிபர் பாதுகாப்புப் பிரிவு ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சிறிலங்கா காவல்துறையின் சிறப்பு அதிரடிப்படை கொமாண்டோக்களிடம், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நேற்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வில் சிறப்பு அதிரடிப்படையினர் தமது முதலாவது பாதுகாப்பை அவருக்கு வழங்கியிருந்தனர்.
5000 பேரைக் கொண்ட பலம் வாய்ந்த அதிபர் பாதுகாப்புப் பிரிவு கலைக்கப்பட்டு, அதில் பணியாற்றிய சிறிலங்கா காவல்துறையினர், ஏனைய காவல்துறைப் பிரிவுகளில் இணைத்துக் கொள்ளப்படுவதாக காவல்துறைப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் அதிபர் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறப்பாக இருந்த மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபர் எஸ்.எம். விக்கிரமசிங்கவுக்கு வேறு பதவி ஒன்று வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.