வேட்பாளர் பட்டியலில் மகிந்தவுக்கு இடமில்லை – மைத்திரி திட்டவட்டமாக அறிவிப்பு
சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே, சிறிலங்கா அதிபர் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.
அதேவேளை, மகிந்த ராஜபக்சவுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்க முடியும் என்று மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், சந்திப்பில் பங்கேற்ற இடதுசாரித் தலைவர் ஒருவரை மேற்கொள்காட்டி வெளியாகியுள்ள மற்றொரு தகவல், மகிந்த ராஜபக்சவுக்கு தேசியப் பட்டியல் ஆசனத்தையும் வழங்க முடியாது என்று மைத்திரிபால சிறிசேன கூறிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
அதேவேளை மகிந்த ராஜபக்ச தனது எதிர்காலத் திட்டம் குறித்து நாளை தனது சொந்த ஊரான மெதமுலானவில் வைத்து அறிவிக்கவுள்ளார்.