விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் கைதடியில் கைது
விடுதலைப் புலிகளின் சீருடையை வைத்திருந்த குற்றச்சாட்டில், கைதடியில் வைத்து இரண்டு பேரை சிறிலங்கா காவலதுறையினர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தகவல் ஒன்றை அடுத்து, கைதடியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று பிற்பகல் சோதனையிட்ட சிறிலங்கா காவல்துறையினர், அங்கிருந்து விடுதலைப் புலிகளின் வரிப்புலி சீருடை, 3 தொப்பிகள், 2 ஜக்கட்டுகள் என்பனவற்றைக் கைப்பற்றினர்.
புதுக்குடியிருப்பில் இருந்து இரகசியமாக இவற்றை எடுத்து வந்து, கைதடியில் வைத்திருந்த நிலையிலேயே காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, புதுக்குடியிருப்பு, வள்ளிபுனத்தைச் சேர்ந்த மனோகரன் மயூரன், கைதடி மேற்கைச் சேர்ந்த வாரித்தம்பி பரத்குமார் ஆகியோர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சீருடையை இளைஞர்களுக்கு அணிவித்து ஒளிப்படம் எடுத்து. அவற்றை, வெளிநாடுகளில் தஞ்சம் அடைவதற்கு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஒருவர், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகச் செயற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.