மகிந்தவின் வீட்டில் மாற்று வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு தீவிரம்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணின் சார்பில் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மறுத்து வரும் நிலையில், தனியானதொரு வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணியில் மகிந்த ஆதரவு அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் மகிந்த ராஜபக்சவுக்கு இடமளிப்பது தொடர்பாக இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் பேச்சுக்கள் ஒரு புறம் நடந்து வரும் நிலையிலேயே, மாற்று அணியின் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.
மீரிஹானவில் உள்ள மகிந்த ராஜபக்சவின் வீட்டில் இந்த வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும் பணிகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவுடன் மகிந்த ராஜபக்ச தரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளது.
இதனிடையே, சுசில் பிரேமஜெயந்த இன்று மகிந்த ராஜபக்ச அணியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை, நாளை மறுதினம் தனது இறுதி முடிவை முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச அறிவிப்பார் என்று அவரது பேச்சாளர் நேற்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.