மகிந்த அணியிடம் இரண்டு திட்டங்கள் – என்கிறார் விமல் வீரவன்ச
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச நிச்சயம் போட்டியிடுவார் என்றும், அவருடன் இணைந்து தேசிய சுதந்திர முன்னணியும் போட்டியிடும் என்றும் அந்தக் கட்சியின் தலைவரான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
”மகிந்த ராஜபக்சவுடன் இணைந்தே தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடும்.
அவர் எந்தக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுகிறாரோ அவர்களுடன் இணைந்தே நாமும் போட்டியிடுவேன். வழக்கம் போலவே நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவேன்.
மகிந்த ராஜபக்சவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட இடம் அளிக்கப்படுமா என்பது குறித்து, அந்தக் கட்சியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜெயந்தவுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
எனினும், மகிந்த ராஜபக்ச போட்டியிடுவது உறுதி.
எம்மிடம் திட்டம் ஏ, திட்டம் பி என, இரண்டு திட்டங்கள் உள்ளன. திட்டம் ஏ தோல்வியில் முடிந்தால், திட்டம் பிஐ செயற்படுத்துவோம்” என்றும் விமல் வீரவன்ச தெரிவித்தார்.