மேலும்

கூட்டமைப்புடன் மைத்திரி அவசர சந்திப்பு – அரசியல்தீர்வு குறித்து தொடர்ந்து பேச இணக்கம்

TNA_PRESSஇனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்துவதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிரிசேனவுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் இன்று நண்பகல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடம்பெற்ற சந்திப்பின் போதே, சிறிலங்கா அதிபரால்இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பில் சிறிலங்கா அதிபருடன் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கவும் கலந்து கொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா,  எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தச் சந்திப்புத் தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறிலங்கா அதிபருடனான சந்திப்பில் நிரந்தர அரசியல் தீர்வொன்றை அடைவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்துப் பேசப்பட்டது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை அடையக் கூடியதும், அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமான அரசியல் தீர்வை அடைவதற்கான பொறிமுறைகளும் மற்றைய தேவைகளுக்கான நடவடிக்கைகளும் சம்பந்தமாக உரையாடப்பட்டது.

வடக்கு, கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான சில பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

குறிப்பாக, பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கைதிகளின் விடுதலை, காணாமல்போனோர் தொடர்பாக எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள்,  பழைய போராளிகள் நாட்டிற்கு திரும்பும் போது கைது செய்யப்படுகின்றமை, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்பவற்றோடு விடுவிக்கப்படுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டும் இன்னமும் நடைமுறைப்படுத்தப்படாத காணி தொடர்பான விடயங்களும் பேசப்பட்டன.

இவை சம்பந்தமாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் தொடர்ச்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்போடு இந்த உரையாடல்களை நடத்துவதாகவும் சிறிலங்கா அதிபர் வாக்குறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *