சிறிலங்கா கடற்படையுடன் மீண்டும் கூட்டு போர்ப்பயிற்சியை ஆரம்பித்தது அமெரிக்க கடற்படை
மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இடைநிறுத்தப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையுடனான போர்ப் பயிற்சிகளை அமெரிக்க கடற்படை மீண்டும் ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பல ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க- சிறிலங்கா கடற்படைகளுக்கு இடையில் கூட்டுப் போர்ப்பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதை, இராணுவ வட்டாரங்கள் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு உறுதிப்படுத்தியுள்ளன.
சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக்காலத்தில் விரிவாக்கப்பட்ட உறவுகள் திட்டத்தில், சிறிலங்காவையும் அமெரிக்கா உள்வாங்கியிருந்தது.
எனினும், கடந்த ஆட்சிக்காலத்தில், சிறிலங்காவுடனான அனைத்து போர்ப் பயிற்சிகளையும் அமெரிக்கா இடைநிறுத்தியிருந்தது.
தற்போது ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து, சிறிலங்கா கடற்படையுடன் மீண்டும் கூட்டுப் போர்ப்பயிற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது.
திருகோணமலைக்கு அப்பாலுள்ள கடலில், சிறிலங்கா கடற்படையின் எஸ்பிஎஸ் எனப்படும், சிறப்பு படகுப் படையணி மற்றும் அதிகவேகத் தாக்குதல் படகு அணிகளுடன் அமெரிக்க கடற்படை கடந்த 19ஆம் நாள் தொடக்கம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்க – சிறிலங்கா ஒத்துழைப்பு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை, சிறிலங்கா கடற்படைத் தலைமையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தக் கூட்டுப் பயிற்சி வரும் ஜூலை 2ஆம் நாள் வரை தொடரும்.
இந்தப் போர்ப் பயிற்சியில், அமெரிக்க கடற்படையின் சீல் எனப்படும் கொமாண்டோ அணி பங்கேற்கிறது.
இந்தக் கூட்டுப்பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில், சிறிலங்கா கடற்படை கொமாண்டோ ஒருவர் பலியானது இந்த பயிற்சியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.