ஜூலை 6ஆம் நாளுக்குள் சிறிலங்கா நாடாளுமன்றம் கலைப்பு
சிறிலங்கா நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை 6ஆம் நாளுக்கு முன்னதாக கலைக்கப்பட்டு விடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, சட்டம் ஒழுங்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளன.
இவை நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் சேர்க்கப்பட்டுள்ள அதேவேளை, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து வரும் ஜூலை 6ஆம் நாள் விவாதம் நடத்துவதென்று கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே, நம்பிக்கையில்லா பிரேணைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று கொழுழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.