சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைக்க முடியாது – சிறிலங்கா அதிபர்
சிறிலங்கா சுதந்திர கட்சியினாலோ அல்லது வேறு எந்த கட்சியினாலோ, சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று நடந்த நுவரெலிய மாவட்ட சிறிங்கா சுதந்திரக் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பில், உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
“அரசாங்கம் ஒன்றை நிறுவ வேண்டுமாயின் சிங்கள பெளத்த, தமிழ், முஸ்லிம் ஆகிய அனைத்து இன மக்களினதும் வாக்குகள் அவசியம்.
சிறிலங்கா சுதந்திர கட்சியினாலோ அல்லது வேறு எந்த கட்சியினாலோ, சிங்கள பெளத்த வாக்குகளால் மட்டும் அரசாங்கத்தை அமைத்துவிட முடியாது.
தனியாக முன்னணி அமைப்பதற்காக அழைக்கும் கூட்டம் சிறிலங்காவுக்கு துரோகம் இழைப்பதுடன் இடதுசாரிக் கொள்கைக்கும் துரோகம் இழைக்கிறது.
கட்சிக்குள் எவரையும் வெட்டி விடுவதற்கோ, வேரறுக்கவோ வேண்டிய தேவை எனக்கு இல்லை.
எனது தேவை எல்லாம் நீங்கள் அனைவரும் ஒற்றுமை யாக சகோதரத்துவத்துடன் இணைந்து செயலாற்றி அரசாங்கத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதேயாகும்” என்றும் அவர் கூறினார்.