மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்தவை எப்படி பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும்? – மைத்திரி கேள்வி
மோசமான – ஊழல் ஆட்சியை நடத்தியதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை, எவ்வாறு எமது பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியும் என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டுள்ள அவர், மகிந்த ராஜபக்சவை கட்சியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த முடியாது என்றும் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.
ஜனநாயக ஆட்சி, சட்டத்தின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதாகவும், பாரிய ஊழல்களை ஒழிப்பதாகவும் மக்களிடம் வாக்குறுதி அளித்தே, தான் பதவிக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், மோசமான ஆட்சி மற்றும் ஊழல்களால் பெரும்பாலான நிராகரிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவை எமது கட்சியின் பிரதமர் வேட்பாராள நிறுத்த வேண்டும் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும் என்றும் மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியிருக்கிறார்.
எனது தேர்தல் அறிக்கைக்கு ஆறு மில்லியன் மக்கள் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் அதற்கு முரணாக எவ்வாறு செயற்பட முடியும்? என்றும் அவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்களிடம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.