சீனாவைச் சார்ந்த வெளிவிவகாரக் கொள்கை மீளாய்வு – ஜப்பானில் மங்கள சமரவீர தெரிவிப்பு
சீனாவைச் சார்ந்திருக்கும் வெளிவிவகாரக் கொள்கையை சிறிலங்கா மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜப்பானுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, அந்த நாட்டின் என் எச் கே செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள செவ்வியிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
“சீனாவின் உதவி முன்னைய ஆட்சியில் ஊழல்கள் மலிவதற்கு இடமளித்தது.
கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தை சிறிலங்கா அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. அது தற்போது மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது.
அந்த திட்டம் முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் இருந்திருக்கக் கூடும்.
சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளுடனும், உறவுகளைப் பலப்படுத்தும் நடுநிலையான இராஜதந்திரத்தை கடைப்பிடிக்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் பின்னர், சாம்பலில் இருந்து ஜப்பான் மிகப்பலமான நாடுகளில் ஒன்றாக எழுச்சி பெற்றது.
உள்நாட்டுப் போரில் சிக்கி மீண்ட சிறிலங்காவுக்கு ஜப்பான் ஒரு நல்ல பாடமாக இருக்கிறது.
சிறிலங்காவின் நிலையான நண்பனாக ஜப்பான் விளங்குகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.