மேலும்

மைத்திரி – மகிந்த இடையே இணக்கத்தை ஏற்படுத்த சுதந்திரக் கட்சியில் ஆறு பேர் கொண்ட குழு அமைப்பு

mahinda-maithripalaசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களுக்கான கூட்டம் இன்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற போதே இந்தக் குழுவை அமைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

கட்சியைப் பலப்படுத்தும் வகையில், மைத்திரிபால சிறிசேனவுக்கும்  மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில், இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டது.

இதற்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுசில் பிரேம் ஜெயந்த, ஜோன் செனிவிரத்ன, ரி.பி.எக்கநாயக்க, அனுர பிரியதர்சன யாப்பா, குமார வெல்கம, டிலான் பெரேரா ஆகியோரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இதற்கு மைத்திரிபால சிறிசேனவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதா என்பது குறித்து இந்தக் குழுவே தீர்மானம் எடுக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச நிச்சயம் தேர்தலில் போட்டியிடுவார் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

எனினும், இன்று நியமிக்கப்பட்டுள்ள குழுவில் இடம்பெற்றுள்ள ஆறு பேரும் மகிந்த ராஜபக்சவின் அனுதாபிகள் என்பதும், அவர் பிரத்தமர் வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *