மைத்திரியின் பாதுகாப்புக்குப் பொறுப்பான அதிகாரி பதவிஇறக்கம்
சிறிலங்கா அதிபர் பாதுகாப்புப் பிரிவின் புதிய பொறுப்பதிகாரியாக சிறிலங்கா காவல்துறையின் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா காவல்துறை மா அதிபர் கடந்த ஜூன் முதலாம் நாள் தொடக்கம் இந்த நியமனத்தை வழங்கியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த மூத்த காவல்துறை மா அதிபர் எஸ்.எம்.விக்கிரமசிங்க தொடர்ந்தும், அதிபர் பாதுகாப்புப் பிரிவிலேயே பணியாற்றுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபராக மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், அவரது பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடுகள் அண்மையில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, சிறிலங்கா இராணுவத்தில் இருந்த அதிபர் பாதுகாப்பு பிரிவு முற்றாக கலைக்கப்பட்டதுடன், மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பு காவல்துறையின் அதிபர் பாதுகாப்புப் பிரிவிடம், ஒப்படைக்கப்பட்டது.
எனினும், மகிந்த ராஜபக்ச காலத்தில் நியமிக்கப்பட்ட அதன் பொறுப்பதிகாரியான எஸ்.எம்.விக்கிரமசிங்க தற்போது, அந்தப் பதவியில் இருந்து இறக்கப்பட்டுள்ளார்.
புதிய பொறுப்பதிகாரியாக அஜித் முனசிங்க நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்குக் கீழ் ஒரு மூத்த பிரதிக் காவல்துறை மா அதிபராக பணியாற்றுமாறு எஸ்.எம்.விக்கிரமசிங்கவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.