பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுவார் மகிந்த – அவரது பேச்சாளர் உறுதிப்படுத்தினார்
சிறிலங்காவில் அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச, பிரதமர் வேட்பாளராக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக,அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பிபிசியிடம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட மகிந்த ராஜபக்ச முயற்சிப்பதாக, அவரது பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் உள்ள, அதிபர் மைத்திரிபால சிறிசேன, அந்தக் கட்சியின் சார்பில் பிரதமர் பதவிக்கு மகிந்த ராஜபக்ச போட்டியிடுவதற்கு இணங்காவிட்டால், அவர் கட்டாயமாக வேறு வழியை முன்னெடுப்பார் என்றும் அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எந்தக் கட்சியில் போட்டியிட்டாலும் மகிந்த ராஜபக்ச பிரதமர் வேட்பாளராகவே போட்டியிடுவார் எனவும் அவரது பேச்சாளர் குறிப்பிட்டார்.
மகிந்த ராஜபக்சவினால் கட்டியெழுப்பப்பட்ட நாடு தற்போது முடங்கிப் போயுள்ளதாகவும், அவரது பேச்சாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.