சனியன்று கொழும்பு வருகிறார் அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, 24 மணிநேரப் பயணமாக வரும் சனிக்கிழமை (மே 02ஆம் நாள்) கொழும்புக்கு வரவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிகாரிகளை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
1972ம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கச் செயலராக இருந்த, வில்லியம் பியேர்ஸ் ரோஜர் மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும், முதலாவது அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி ஆவார்.
வரும் சனிக்கிழமை கொழும்பு வரும் ஜோன் கெரி மறுநாள் புறப்பட்டுச் செல்வார்.
அவர், சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ளதுடன், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடனான பேச்சுக்களையடுத்து, ஊடகச் சந்திப்பு ஒன்றையும் மேற்கொள்ளவுள்ளார்.
இவர் கொழும்புடன் பயணத்தை நிறுத்தமாட்டார் என்றும், பௌத்த விகாரை ஒன்றுக்குச் சென்று வெசாக் பந்தலை திறந்து வைப்பார் என்றும், கொழும்பில் அமெரிக்க தூதரகத்துக்கான கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.