நேபாளம் செல்கிறது சிறிலங்கா விமானப்படை விமானம் – இலங்கையரை மீட்டு வரும்
நிலநடுக்கத்தினால் பேரழிவைச் சந்தித்துள்ள நேபாளத்தில் உள்ள இலங்கையர்களை மீட்டு வருவதற்காக சிறிலங்கா விமானப்படையின் சிறப்பு விமானம் ஒன்று காத்மண்டுவுக்கு செல்லவுள்ளது. நேபாளத்தில் இன்று நிகழ்ந்த மோனமான நிலநடுக்கத்தில், குறைந்தது 1130 பேர் பலியானதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலநடுக்கத்தினால், இலங்கையர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேவேளை, நேபாளத்தில் தங்கியுள்ள இலங்கையர்களை மீட்டு வர சிறிலங்கா விமானப்படை விமானம் ஒன்று காத்மண்டு செல்லவுள்ளது.
அவசர நிவாரணப் பொருட்களை ஏற்றிச் செல்லும் இந்த விமானம், அங்கிருந்து இலங்கையர்களை திருப்பி அழைத்து வரவுள்ளது.
நேபாளத்தில் உள்ள சிறிலங்கா மாணவர்கள் மற்றும் குடிமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அங்குள்ள சிறிலங்கா தூதுவர் செனிவிரத்ன தெரிவித்துள்ளார்.
பொக்காராவில் உள்ள மணிப்பால் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் 120 இலங்கை மாணவர்களும், காத்மண்டு பகுதியில் வசித்த 20 இலங்கையர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.