நேபாளத்துக்கு 159 பேர் கொண்ட மீட்புக்குழுவை அதிகாலையில் அனுப்பியது சிறிலங்கா
நேற்று நிகழ்ந்த பாரிய நில நடுக்கத்தினால், 1500 பேருக்கு மேலானோர் பலியான நேபாளத்துக்கு, சிறிலங்கா இன்று அதிகாலையில் 159 பேர் கொண்ட மீட்புக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளது.
இந்தக் குழுவில் நான்கு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளதுடன், பெரும்பாலானவர்கள், சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்தவர்களாவர்.
சிறிலங்கா விமானப்படையின், போக்குவரத்து விமானம் மூலம் இவர்கள், காத்மண்டுவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், நடத்திய ஆலோசனையின் பின்னர், மீட்பு முயற்சிகளுக்கான ஒருங்கிணைப்புக் குழுவொன்று உருவாக்கப்பட்டது.
அத்துடன், நேபாள பிரதமர் சுசில் கொய்ராலாவுடன், சிறிலங்கா பிரதமர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, சிறிலங்கா அரசாங்கம் மற்றும் மக்களின் சார்பில் கவலை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, இன்று நண்பகல் சிறிலங்கன் எயர்லைன்ஸ் விமானம் ஒன்று, பாதிக்கப்பட்டவர்களுக்கான உலர் உணவுப் பொருட்களுடன் காத்மண்டுவுக்குப் புறப்படவுள்ளது.
இந்த விமானம், நேபாளத்தில் சிக்கியுள்ள சிறலங்கா மாணவர்களையும், இலங்கையர்களையும் ஏற்றிவரவுள்ளது.
இதற்கிடையே, நேபாளத்துக்குச் செல்லும், மீட்புக் குழுவில் இடம்பெற்றுள்ள சிறிலங்காப் படையினர் மற்றும் அதிகாரிகளுக்கு அவசர கடவுச்சீட்டுக்களை வழங்கும் நடவடிக்கையில், புஞ்சிபொரளையில் உள்ள சிறிலங்கா கடவுச்சீட்டு வழங்கும் பிரதான பணியகம், நேற்றிரவு, ஈடுபட்டிருந்தது.