விசாரணைக்குச் சென்ற பசில் ராஜபக்ச கைது
சிறிலங்காவின் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து வாக்குமூலம் அளிப்பதற்காக, இன்று காலை 11 மணியளவில், நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு பசில் ராஜபக்ச சமூகமளித்திருந்தார்.
அவரிடம், மாலை 5 மணி வரை விசாரணைகள் நடத்தப்பட்டதையடுத்தே, கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, இன்று பிற்பகல், பசில் ராஜபக்ச விசாரிக்கப்பட்டு வந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக, வீதித்தடைகள் போடப்பட்டு, கலகத் தடுப்பு பிரிவு காவல்துறையினரும், குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளும் குவிக்கப்பட்டனர்.
இதனால் பசில் ராஜபக்ச எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.
அதேவேளை, பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரை கடுவெல நீதிமன்றத்தில், முன்னிலைப்படுத்துவதற்காக இரகசியமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லலித் வீரதுங்கவிடம் 8 மணி நேரம் விசாரணை
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் செயலராக இருந்த லலித் வீரதுங்க எட்டு மணிநேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.
தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் நிதியை அதிபர செயலகத்துக்கு மாற்றியது தொடர்பாக இன்று அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன்பாக வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்டார்.
இன்று காலை 9.30 மணியளவில் விசாரணைக்காக நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்குச் சென்ற லலித் வீரதுங்கவிடம் 8 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.
மாலை 6.15 மணியளவிலேயே லலித் வீரதுங்க விசாரணையை முடித்து வெளியே வந்தார்.